4/10/2017

சுருங்கிய முகம்...

சுருங்கிய முகம்...

அந்த மூதாட்டி தள்ளாடி வந்த போது, கொஞ்சம் நெஞ்சு படபடத்தது, ‘என்ன எதிர்பார்த்து வராளோ’ என்கின்ற தயக்கமும், கூடவே, ‘நம்மால் அதிகம் ஏதும் செய்ய இப்போது முடியாது’ என்கின்ற நிதர்சனமும் சேர்ந்தே இந்த படபடப்பை கொடுத்தது. மூச்சிரைக்க தனது ஊன்றுகோலை கொண்டு வந்தவள், உச்சி வெய்யிலின் வெப்பத்தில் பேச இயலாமல் விழுங்கினால். “உட்காருங்க ஆயா”, என்றான் மதன். “சாமியெல்லாம் நிக்கிறீங்களே”, என்று வார்த்தை மிக சிரமத்துடன் அவள் சுருங்கிய முகத்தின் ஊடே இருந்து அணியும் விளக்கின் கரும்புகைபோல் தப்பி வந்தது.  “பரவாயில்லை உட்காருங்க”, என்று இருக்கையை காட்டினேன். உலர்ந்த சருகாய் படிந்தாள். கொசுவம் வைத்து கட்டிய கதர் புடவை, அழகாய் உடுதியிடுந்தாள், மதன் கொடுத்த தண்ணீரை குடிக்கையில் அவள் தொண்டை ஈர்த்ததற்கு சுற்றியிருந்தவர் அனைவரும் சேர்ந்தே பெருமூச்சு விட்டனர். கைகளை மிகவும் மரியாதையுடன் கட்டிக்கொண்டு, வாடி சுருங்கிய முகம், சோகமாய் இன்னமும் சுருங்க சொன்னாள், “கஞ்சி குடிக்ககூட வழியில்லயா, எல்லாம் வறண்டு போச்சு, விவசாயம் இல்லை, வேலையும் இல்லை. ஏதேனும் செய்யுங்க ராசா”. “அவங்களுக்கு நாலு பொண்ணுங்க, எல்லாரையும் கூலி வேல செஞ்சுதான் கலியாணம் செஞ்சு கொடுத்தாங்க, ரெண்டு பேரு வேறு ஊருல இருக்காங்க, நாங்க ரெண்டு பேரு இப்போ இங்கயே வந்துடோம்”, என்றார், இந்த கிழவியைவிட கொஞ்சமே வயதில் குறைந்த தோற்றத்தில் இருந்த இன்னொரு பெண். இருவரும் கணவனை இழந்ததால் சொந்த ஊருக்கு மீண்டும் குடிபெயர்ந்தது உணர்ந்தேன்.

பாரம்பரியமாக செருப்பு தைக்கும் குடும்பங்கள். அதற்கொரு ஜாதி பெயரைசூட்டி, இவர்களை ஒதுக்கி, விவசாய கூலி வேலை வாங்கிய சமூகம், சமீபத்தில் அரசாங்கத்துடன் சேர்ந்து, “தாராளமாக”, இவர்களது 24 குடும்பங்களுக்கு, மொத்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கியிருந்தது. ஏதோ ஒரு ஊரில் சொந்த ஊரை நினைத்து வாடும் சில தமிழர்கள், இவர்களது நிலையை கண்டு, சிறு வீடுகள் கட்டி கொடுத்திருந்தார்கள். “எங்கள் ஊருக்கு எந்த வசதியும் இல்லை, நூறு நாள் வேலைவாய்ப்பு புதிய அட்டை கூட எங்களில் பலருக்கு குடுக்கவில்லை, ஏன் என்று தெரியவில்லை!” அங்கலாய்தார் அருகிலிருந்த பெரியவர். “எனக்கு 75 வயசு இருக்கும், நான் எப்பவவுமே வயசைகொஞ்சம் கூட்டிதான் சொல்வேன்”, என்றால் மூதாட்டி. “ 75ஆ? உனக்கு அதைவிடல் அதிகமாகவே இருக்கும்”, என்றாள் அவளது மகள்களில் ஒருவள், “எனேக்கே 47 வயசு ஆகுது, ஆனா இந்த அரசாங்க ஆளுங்க எனக்கு 65    வயசுன்னு எழுதிட்டு போறானுங்க”, என்றாள்.

பெண்களுக்கு வயதை குறைக்கும் பல யுக்திகளில் முதன்மையானது தினமும் தேவையான அளவு சத்துள்ள உணவு. அதுவே இல்லாத நாட்டில் இதர விதங்களில் தினம் தினம் ‘வயதை குறைக்க’ பல ஆயிரம் செலவில் மருத்துவ ஆலோசனைகள், விளம்பரங்கள். சிவப்பும், வெளுப்பும் செய்வோம் என்று பொய் சொல்லும் சாத்திரங்கள்.  (to continue)  

No comments:

Post a Comment